தமிழ்நாடு

சென்னை கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு... பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல்

Published On 2022-11-15 04:20 GMT   |   Update On 2022-11-15 04:20 GMT
  • பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
  • திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை:

சென்னையில் தவறான சிகிச்சையால் காலை இழந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பிரியா இன்று உயிரிழந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்த அவர் மரணம் அடைந்தது அவரது குடும்பத்தினரை கடும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

மாணவி பிரியா மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தவறான சிகிச்சை அளித்ததாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பிரியா மறைவு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது. தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

திமுக அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.

Tags:    

Similar News