தமிழ்நாடு

மகளிர் மசோதா நிச்சயம் அமல்படுத்தப்படும்: வானதி சீனிவாசன்

Published On 2023-10-02 08:06 GMT   |   Update On 2023-10-02 08:06 GMT
  • மகளிர் இடஒதுக்கீடு மசோதவை தேர்தல் நாடகம் என்று கூறுவது மிகவும் தவறானது.
  • தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனை அதிகரித்துள்ளது.

கோவை:

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்லியில் 5 மாநில தேர்தல் தொடர்பான மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தேசிய தலைமையின் முக்கிய தலைவர்களுடன் அந்த மாநிலங்களில் செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள், திட்டங்கள் குறித்து தான் விவாதிக்கப்பட்டது. மொத்தத்தில் எனது டெல்லி பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் 33 சதவீத சட்ட மசோதாவில் காங்கிரஸ் இருந்த மனநிலையிலேயே இருக்கிறார். தற்போது நடப்பது பா.ஜ.க ஆட்சி. மகளிர் சட்ட மசோதாவை கொண்டு வந்திருப்பவர் பிரதமர் மோடி.

பா.ஜ.கவும், பிரதமர் மோடியும் எதை சொல்கிறார்களோ அதை செய்து காட்டக்கூடியவர்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதவை தேர்தல் நாடகம் என்று கூறுவது மிகவும் தவறானது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா உரிமை கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.

தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனை விற்பவர்கள் மீதும் எந்தவித தயவு தாட்சணையும் பார்க்காமல் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடு முழுவதும் மக்கள், நம் நாட்டில் மற்றும் உள்ளூர் பகுதிகளில் தயாராகும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அண்மையில் டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நம் நாட்டில் தயாரான பாரம்பரிய பொருட்களை பரிசளித்தார். அதேபோன்று நாம் நம் நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ஓ.பி.எஸ்.சை, பா.ஜனதாவில் இணைப்பது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது தனக்கு தெரியாது என்று கூறினார்.

Tags:    

Similar News