காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க கார்த்தி ப.சிதம்பரம் தீவிரம்
- 5 மாநில தேர்தல் நடந்ததால் சற்று தொய்வாக இருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
- தலைவர் பதவிக்காக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தலைவர் பதவியை பிடிக்க பலர் முயற்சி செய்தும் மேலிடம் இன்னும் எந்த சிக்னலும் காட்டவில்லை.
ஆனால் அனைவரையும் அரவணைத்து இணக்கமாக செல்லும் உணர்வு படைத்தவரை தலைவராக நியமிக்க மேலிடம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், ஜோதி மணி ஆகிய நால்வரில் ஒரு வரை நியமிக்கலாம் என்றார். 5 மாநில தேர்தல் நடந்ததால் சற்று தொய்வாக இருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
தலைவர் பதவிக்காக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்கள். தலைவர் பதவி மீது தனக்கு ஆசையாக இருப்பதாக வெளிப்படையாகவே கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.
நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். அப்போது தனக்கு தலைவர் பதவி தந்தால் சிறப்பாக செய்வேன் என்று தெரிவித்துள்ளார். கர்நாட காவில் டி.கே.சிவகுமாரும், தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டியும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்சி நடத்தியதால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதேபோல் தமிழ்நாட்டின் தலைமை பதவி எனக்கு வழங்கினால் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வர உழைக்க தயாராக இருப்பதாக கார்கேவிடம் உறுதியளித்துள்ளார். அதை கேட்டுக் கொண்ட கார்கே பார்க்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.