தமிழ்நாடு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2023-08-19 11:29 IST   |   Update On 2023-08-19 11:29:00 IST
  • விமானத்தில் 2 பயணிகள் தங்களது உடைமைகளை 5 அட்டை பெட்டிகளில் பிரித்து அதனை கார்கோ பிரிவில் அனுப்பியிருந்தனர்.
  • விசாரணையில் அந்த பயணிகள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் துபாயிலிருந்து திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

இந்த விமானத்தில் 2 பயணிகள் தங்களது உடைமைகளை 5 அட்டை பெட்டிகளில் பிரித்து அதனை கார்கோ பிரிவில் அனுப்பியிருந்தனர்.

பின்னர் அந்த பொருட்களை திருச்சி விமான நிலையத்தில் பெற்று கொள்ள வந்த போது அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவர்களது உடமைகளின் மீது துகள் வடிவில் தங்கம் பூசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக முற்பட்ட போது அந்த இரு நபர்களில் ஒருவர் முனைய வளாகத்தில் இருந்து தப்பி ஓடினார்.

அதிர்ச்சியடைந்த சுங்கத்திரை அதிகாரிகள் அவரை 2 கி.மீ. தூரம் சினிமா பாணியில் விரட்டிச் சென்று பிடித்து மீண்டும் விசாரணைக்காக அழைத்து வந்தனர் .

விசாரணையில் அந்த பயணிகள் இருவரும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து சுமார் 920 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் இந்திய மதிப்பு ரூ. 55 லட்சத்து 22 ஆயிரம் என தெரிய வருகிறது.

Tags:    

Similar News