அஞ்சல் சேவை தனியார்மயத்தை கண்டித்து தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
- அஞ்சல் துறை தனியார் மயமாக்கலை கண்டித்து தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
- தபால் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
சென்னை:
அஞ்சல் துறை தனியார் மயமாக்கலை கண்டித்து இன்று தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
அஞ்சல் துறை தனியார் மயமாக்கலுக்கு எதிராக இன்று (10- ந்தேதி) வேலை நிறுத்தம் நடத்தப்படும் என தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு அறிவித்தது. அதன்படி அஞ்சல் துறையின் பல்வேறு பிரிவுகளின் தனியார் மயமாக்கலுக்கு எதிராக வேலைநிறுத்த போராட்டம் சென்னையில் இன்று நடந்தது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் இன்று 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
இதனால் தபால் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
பார்சல் சேவைகள், டெலிவரி சேவைகள் குறைந்தன. தபால் நிலையத்துக்கு பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால் நீண்ட நேரம் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
சென்னை வடக்கு கடற்கரை, பார்க் டவுன், தி.நகர், அண்ணாநகர், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய அஞ்சல் நிலையங்களில் குறைந்த அளவிலான ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.
இதனால் வாடிக்கையாளர் சேவை பணிகள் பாதிக்கப்பட்டது. தபால் ஊழியர்கள் போராட்டத்தால் அஞ்சல் சேவையில் 50 சதவீதம் பணிகள் பாதிக்கப்பட்டது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியர் ஒருவர் கூறியதாவது:-
மத்திய அரசு தபால் துறையை தனியார்மயம் ஆக்குவதை உடனடியாக கைவிட வேண்டும்.மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.
காலியாக உள்ள அனைத்து தபால் பணி இடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா தொற்றினால் இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கி குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.