தமிழ்நாடு

ஓ.பி.எஸ். பதவி பறிப்பு- எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிரடி

Published On 2022-07-19 07:35 GMT   |   Update On 2022-07-19 07:37 GMT
  • ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் சபாநாயகரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
  • அந்த மனுவில், 'சட்ட மன்ற குழுவை மாற்றி அமைக்கும் படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும்.

சென்னை:

தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியையும் பறித்து கட்சியில் மட்டுமல்லாமல் சட்டசபையிலும் அவரது அந்தஸ்தை இழக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களை தன்வசம் வைத்துள்ள எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 62 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள்.

ஓ.பி.எஸ். அணியில் அவரையும் சேர்த்து 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். அதாவது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறித்துள்ளார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை, ஆழ்வார்பேட்டை, பார்க் ஓட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கழக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி துணைத்தலைவராக திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை செயலாளராக போளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான பரிந்துரை கடிதத்தை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பி உள்ளார்.

இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் சபாநாயகரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'சட்ட மன்ற குழுவை மாற்றி அமைக்கும் படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும்.

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுபற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தரப்பில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

பொதுக்குழு தொடர்பான வழக்குக்கும் சட்டமன்ற குழுவை மாற்றி அமைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்போதைய நிலையில் 63 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே யாரை தேர்வு செய்வது, யாரை நீக்குவது என்பதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர்தான் முடிவு செய்வார்கள். அதில் எந்த பிரச்சினையும் வராது' என்றனர்.

Tags:    

Similar News