பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி?- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
- தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நல்ல அரசு.
- வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டாயம் வழங்க வேண்டும்.
கோவை:
தே.மு.தி.க. பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நூலகம் திறப்பது நல்ல விஷயம், அது ஒரு அறிவு சார்ந்த விஷயம் என்பதால் வரவேற்கத்தக்க விஷயம். அனைத்து ஊர்களில் திறந்தாலும் நல்லது தான்.
தி.மு.க. தேர்தலுக்கு முன்பு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றார்கள். ஆனால் வெற்றி பெற்ற பிறகு தகுதியான பெண்களுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறுவது கண்டிக்கத்தக்க விஷயம்.
தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நல்ல அரசு. எனவே வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டாயம் வழங்க வேண்டும்.
கேப்டன் (விஜயகாந்த்) நன்றாகவும், சிறப்பாகவும் இருக்கிறார். முக்கியமான நேரங்களில் தொண்டர்களை கட்டாயம் அவர் சந்திப்பார். தே.மு.தி.க.வை பொருத்தவரை எங்களுடைய பணிகளை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் எங்களுடைய உட்கட்சி தேர்தல் முடிந்து விட்டது. இதற்கு அடுத்து செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்டவற்றை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும். இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்படும். அந்த முடிவை தலைவர் உரிய முறையில் அறிவிப்பார். மக்கள் எந்தக் கூட்டணியை ஏற்று கொள்கிறார்கள், யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தற்போது என்னுடைய இளைய மகனின் அடுத்த படத்திற்கான பட பூஜைக்காக வந்துள்ளேன். அவரது பட பூஜை பாலக்காட்டில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள தான் நான் வந்துள்ளேன். விஜய பிரபாகரனின் இசைக்கச்சேரி இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப்பெரிய அளவில் மும்பையில் வருகிற நவம்பர் 25-ந் தேதி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினர்.