குடியரசு தினத்தன்று அரசிடம் இருந்து விருது பெறுவது மகிழ்ச்சி
- முகமது ஜூபேர் என்பவர் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.
- அரசாங்கத்திடம் இருந்து எனக்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.
தமிழ்நாடு அரசு மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் பெயரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் என்ற பதக்கத்தினைத் தோற்றுவித்து, ஆண்டு தோறும் மத நல்லிணக்கத்திற்காக சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அப்பதக்கத்தை வழங்கி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், தளி பஞ்சாயத்து, உருது பள்ளி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முகமது ஜூபேர் என்பவர் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.
முகமது ஜூபேர் 'ஆல்ட் நியூஸ்' என்ற பெயரில் இணையதளத்தைத் தொடங்கி, சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணைய தளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறார்.
அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க உதவி வருகிறது.
இவ்வாறு, மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு வரும் முகமது ஜூபேரை பாராட்டும் வகையில் இவருக்கு 2024-ம் ஆண்டிற்கான கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு இந்த விருதை வழங்கினார்.
விருது பெற்ற முகமது ஜூபேர் பேசியதாவது:-
"தமிழ்நாடு அரசிடம் இருந்து மத நல்லிணக்க விருதைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அரசாங்கத்திடம் இருந்து எனக்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. குடியரசு தினத்தன்று அரசிடம் இருந்த இத்தகைய அங்கீகாரம் பெறுவது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. தமிழ்நாடு அரசுக்கு நன்றி!" தெரிவித்தார்.