தமிழ்நாடு செய்திகள்

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்- சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி நடந்தது

Published On 2023-09-19 11:16 IST   |   Update On 2023-09-19 11:16:00 IST
  • முத்து கவுண்டம்பாளையம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முத்துகவுண்டம் பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதி மக்களுக்கு கடந்த 2 மாதமாக சீரான குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்போது மக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முத்துகவுண்டம் ஊராட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து இன்று காலை இந்த பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்து ஈரோடு-வெள்ளக்கோவில் ரோடு, முத்து கவுண்டம்பாளையம் பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குடிநீர் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News