தமிழ்நாடு

பொங்கல் பணம் ரூ.1000 பெறுவதற்கு முறையான அறிவிப்பு விரைவில் வரும்- அமைச்சர் பெரியகருப்பன்

Published On 2022-12-27 08:00 GMT   |   Update On 2022-12-27 08:00 GMT
  • பொதுமக்களுக்கு சென்ற ஆண்டு 21 பொருட்களுடன் கரும்பையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.
  • சில குறைபாடுகளை பலர் சுட்டிக்காட்டினார்கள்.

சென்னை:

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமையில் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் விளக்கி கூறினார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கே:- பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாததால் அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்களே? என்ன காரணத்தால் கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை?

ப:- பொதுமக்களுக்கு சென்ற ஆண்டு 21 பொருட்களுடன் கரும்பையும் முதல்-அமைச்சர் வழங்கினார். அதில் சில குறைபாடுகளை பலர் சுட்டிக்காட்டினார்கள். பல கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பை கொடுக்கும் போது ஒரு சில இடங்களில் எங்காவது தவறு நடந்திருந்தால் அதை மிகைப்படுத்தி காட்டும் காரணங்களால் இதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த முடிவு எடுத்திருக்கலாம்.

கே:- பொங்கல் பணம் ரூ.1000 மக்களுக்கு எப்படி கொடுக்க போகிறீர்கள்? டோக்கன் வழங்கப்படுமா?

ப:- அதுபற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. அதுதொடர்பாக ஆலோசனை நடத்தி முறையான அறிவிப்பு வெளியிடுவோம். எனவே மக்களை குழப்பிவிட வேண்டாம். நாளை மாலை 3 மணிக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறோம்.

கே:- தவறுகள் நடைபெறாத அளவுக்கு பொங்கல் தொகுப்பை வழங்க முடியாதா?

ப:- அதுபற்றி முதல்-அமைச்சர் சிந்தித்து கொண்டு இருக்கிறார். இதுபற்றி முதல்-அமைச்சர் முடிவெடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News