தமிழ்நாடு

உடல் உறுப்பு தானம் - சிறுவனின் பெற்றோரிடம் கதறி அழுத அமைச்சர்

Published On 2023-12-01 07:31 GMT   |   Update On 2023-12-02 07:23 GMT
  • 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராகவேந்திரா மூளைச்சாவு அடைந்தார்.
  • சிறுவன் ராகவேந்திராவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கலைச் சேர்ந்தவர் அருள். இவரது மனைவி பரிமளா. இத்தம்பதியின் மகனான ராகவேந்திரா 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 18-ந்தேதி இரவு நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் ஆற்காடு-ஆரணி சாலையில் ராகவேந்திரா சென்றார். அப்போது, எதிரே வந்த நபர்கள் மீது சிறுவன் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ராகவேந்திராவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராகவேந்திரா மூளைச்சாவு அடைந்தார்.

மகன் இறந்துவிட்ட துக்கம் தாங்காமல் பெற்றோர் உடைந்து போக… அவர்களை அழைத்து உடலுறுப்பு தானம் குறித்தும், சிறுவனின் உறுப்புகள் மூலம் பலர் புதுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்கினர். இதற்கு சிறுவனின் பெற்றோர் சம்மதிக்க, மின்னல் வேகத்தில் மருத்துவர்கள் உடல் உறுப்புகளை அகற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதயம் மற்றும் நுரையீரல் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் சி.எம்.சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் அப்போலோ மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.

இதையடுத்து, சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் ராகவேந்திராவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் சென்றனர். அப்போது மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது சிறுவனின் பெற்றோர், தங்களுக்கு உடல் உறுப்பு தானம் பற்றி எதுவும் தெரியாது, மருத்துவர்கள் சொன்னதால் விழிப்புணர்வு பெற்றதாக அழுதபடி அமைச்சரிடம் கூறினர். இதனால், உருக்கமாக இருகரம் கூப்பி வணங்கிய அமைச்சர், கண்ணீர் சிந்தியபடி, அவர்களின் காலில் விழவும் முயன்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Tags:    

Similar News