மேட்டூர் அணை நீர்மட்டம் 64.20 அடியை எட்டியது
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனிடையே கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடிக்கும் கீழ் குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது.
இதனிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 3 ஆயிரத்து 829 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 760 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று 63.83 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 64.20 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 27.91 டி.எம்.சி.யாக உள்ளது.
கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து 424 கனஅடியாவும், ஆற்றில் தண்ணீர் திறப்பு 424 கனஅடியாகவும் உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 98.58 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 856 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 3 ஆயிரத்து 836 கனஅடி தண்ணீர் குடிநீர் மற்றும் வாய்க்காலில் வெளியேற்றப்படுகிறது.