தமிழ்நாடு

சேத்துப்பட்டு-நுங்கம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணி ஜூலை மாதம் தொடங்குகிறது

Published On 2023-05-21 08:53 GMT   |   Update On 2023-05-21 08:53 GMT
  • சேத்துப்பட்டு முதல் நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜூலையில் தொடங்கும் என்று தெரிகிறது.
  • சுரங்கப்பாதை துளையிடும் எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில்நிலைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

சென்னை:

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

மாதவரம் பால் பண்ணை -சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித் தடங்களில் 118 கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து மெட்ரோ ரெயில் பாதைகளில் தற்போது சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் வேகம் எடுத்து உள்ளது. மாதவரம் மற்றும் கிரீன்வேஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகின்றன.

இதைத்தொடர்ந்து சேத்துப்பட்டு முதல் நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜூலையில் தொடங்கும் என்று தெரிகிறது.

ஸ்டெர்லிங் சாலை சந்திப்பின் கீழ் 850 மீட்டர் நீளத்துக்கு இரட்டை சுரங்கப்பாதை அமைய உள்ளது. இது மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தில் சிறிய பகுதி ஆகும்.

இதற்காக சுரங்கப்பாதை துளையிடும் எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில்நிலைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, `சுரங்கப் பாதை துளையிடும் எந்திரம் விரைவில் தயார் செய்யும் பணி தொடங்கப்படும். இது அடுத்த மாதத்தில் முடிவடையும். எனவே ஜூலை மாதம் முதல் சேத்துப்பட்டில் சுரங்கப்பாதை பணி தொடங்க வாய்ப்பு உள்ளது.

சேத்துப்பட்டில் 22 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை பணி தொடங்கப்படும். இது ஸ்டெர்லிங் சாலை சந்திப்பை நோக்கி செல்லும் போது சுரங்கப்பாதையின் ஆழம் 15 மீட்டராக குறையும். ஏற்கனவே அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது என்றார்.

Tags:    

Similar News