தமிழ்நாடு செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க. பிரமுகரை தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு

Published On 2023-03-12 11:20 IST   |   Update On 2023-03-12 11:20:00 IST
  • எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்ததாகவும், மேலும் கட்சி நிர்வாகிகள் சிலர் அவரை தாக்கியதாகவும் புகார் எழுந்தது.
  • போலீசார் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட 4 பேர் மீது ரத்தக்காயம் ஏற்படுத்துதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவனியாபுரம்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எம்.வையாபுரிபட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 42). கட்டிட தொழிலாளியான இவர் அ.ம.மு.க. நிர்வாகியாகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து பஸ்சில் வெளியே வந்தார். அப்போது அவருடன் பயணம் செய்த ராஜேஸ்வரன் என்பவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து அவதூறாக பேசினார்.

இதனை கண்ட எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்ததாகவும், மேலும் கட்சி நிர்வாகிகள் சிலர் அவரை தாக்கியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக ராஜேஸ்வரன் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட 4 பேர் மீது ரத்தக்காயம் ஏற்படுத்துதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ராஜேஸ்வரன் மீது புகார் செய்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமியை திட்டமிட்டு அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்து உள்ளார். அதன்பேரில் ராஜேஸ்வரன் மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இருதரப்பு புகார் தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News