தமிழ்நாடு

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததை படத்தில் காணலாம்.

தொடர் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-10-02 03:48 GMT   |   Update On 2022-10-02 03:48 GMT
  • தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடந்து முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது.
  • காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் மக்கள் சுற்றுலாதலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது.

2-வது சீசனையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 150 ரகங்களை சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது.

தற்போது அந்த செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. கடந்த மாதம் சீசன் தொடங்கியும், சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது.

தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடந்து முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி மற்றும் ஆயுத பூஜை விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் மக்கள் சுற்றுலாதலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர். நேற்று காலை முதலே ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி மலர் மாடத்தில் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

பூங்காவில் மேரிகோல்டு, லில்லியம், டையான்தஸ், பால்சம் உள்ளிட்ட மலர் ரகங்களை சேர்ந்த 10 ஆயிரம் பூந்தொட்டிகள் மலர் மாடம் மற்றும் பெரணி இல்லம் அருகே புல்வெளியில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மாடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.

மேலும் மலர்களை தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மலர்கள் பின்னணியில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 2-வது சீசனையொட்டி மலர்கள் பூத்து குலுங்குவதால், பூங்காவே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.

இதேபோல் படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள் வருகையால் நீலகிரியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News