தமிழ்நாடு செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் தூங்கிய மூதாட்டி-மகளை தாக்கி நகை, பணம் கொள்ளை

Published On 2023-08-30 15:00 IST   |   Update On 2023-08-30 15:01:00 IST
  • பீரோவை உடைத்து 7 பவுன் நகை, பூஜை அறையில் இருந்த வெள்ளிபொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்தனர்.
  • வீடு புகுந்து தாய்-மகளை தாக்கி கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி துர்கா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ரமேஷ் இரவு பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் துர்கா, அவரது தாய் சாந்தா(வயது62) மற்றும் துர்காவின் 2 மகன், மகள் இருந்தனர்.

அவர்கள் வழக்கம்போல் இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கினர். அவர்கள் வீட்டின் கதவை பூட்டவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் 3 மர்ம வாலிபர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்தனர்.

அவர்கள் பீரோவை உடைத்து 7 பவுன் நகை, பூஜை அறையில் இருந்த வெள்ளிபொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்தனர்.

மேலும் அங்கிருந்து செல்லும்போது கொள்ளையர்கள் அறையில் தூங்கிக்கொண்டு இருந்த துர்க்காவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த துர்கா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு எழுந்த மூதாட்டி சாந்தியும் அலறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளை கும்பல் கையில் வைத்திருந்த பீர்பாட்டில் மற்றும் செங்கலால் துர்கா மற்றும் அவரது தாய் சாந்தா ஆகியோரை தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். கொள்ளையர்கள் 3 பேரும் உடல் முழுவதும் எண்ணெய் தடவி ஜட்டி மட்டும் அணிந்து வந்து உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்கள் தாக்குதலில் காயம் அடைந்த துர்கா மற்றும் அவரது தாய் சாந்திக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளை கும்பலா? அல்லது பழைய குற்றவாளிகளா? என்ற போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

வீடு புகுந்து தாய்-மகளை தாக்கி கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News