தமிழ்நாடு

கல்லூரி மாணவி கொலை சம்பவத்தில் அடுத்த அதிர்ச்சி- மகள் இறந்த துக்கத்தில் தந்தை மரணம்

Published On 2022-10-14 04:19 GMT   |   Update On 2022-10-14 05:50 GMT
  • கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.
  • திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளிவிட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சதீஷ் என்ற இளைஞர் மாணவியை காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர்.

இந்நிலையில், மகள் இறந்த சோகத்தில் இருந்த மாணவியின் தந்தையும் மரணமடைந்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகள் இறந்த தகவல் அறிந்த தந்தை துக்கம் தாங்காமல், உறவினர்களிடம் புலம்பிக் கொண்டே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இருவரின் உடல்களும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை மகள் மற்றும் தந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News