ஓசூரில் ரூ.5.30 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்திய டிரைவர் கைது
- போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று மாலை, ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேனை, தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 80 மூட்டை மற்றும் 4 அட்டைப்பெட்டிகளில் 640 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.5, 30,000 ஆகும். இதனை சரக்கு வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து விற்பனைக்காக சேலம் பகுதிக்கு அந்த குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து வேன் டிரைவர் அஜித்குமார் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.