தமிழ்நாடு

சுதந்திர தின விழாவில் பங்கேற்று திரும்பிய பிளஸ்-2 மாணவி பஸ் மோதி பலி

Published On 2022-08-15 07:19 GMT   |   Update On 2022-08-15 07:19 GMT
  • மாணவி சென்ற அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலை மிகவும் குறுகலானது ஆகும்.
  • பஸ் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியாகிவிட்டார்.

தாம்பரம்:

நாட்டின் 75-வது சுதந்திரதின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் பொழிச்சலூர் அருகே சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய பிளஸ்-2 மாணவி பஸ்மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

தாம்பரம் அருகே உள்ள நெமிலிச்சேரி, தனபால் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகள் லட்சுமி ஸ்ரீ(வயது17). சிட்லபாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

சுதந்திரதின விழாவையொட்டி பள்ளியில் நடந்த விழாவில் லட்சுமி ஸ்ரீ பங்கேற்க சைக்கிளில் வந்தார். அவர் கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

விழா முடிந்ததும் காலை 11 மணியளவில் மாணவி லட்சுமி ஸ்ரீ வீட்டுக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் புறப்பட்டார்.

அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலையில் சென்று கொண்டு இருந்த போது, பொழிச்சலூரில் இருந்து அஸ்தினாபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்(எண்52எச்) திடீரென முன்னால் சென்ற மாணவி லட்சுமிஸ்ரீயின் சைக்கிள் மீது உரசியது. இதில் நிலை தடுமாறிய லட்சுமிஸ்ரீ சைக்கிளோடு கீழே விழுந்தார். பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனே பஸ்சை நடுரோட்டில் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பஸ்மோதி மாணவி பலியானது பற்றி அறிந்ததும் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் அப்பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சிட்லபாக்கம் போலீசார் மற்றும் சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஸ் டிரைவரின் கவனக்குறைவால் விபத்தில் மாணவி பலியாகி விட்டதாக குற்றம் சாட்டினர்.

போலீசாரின் சமாதான பேச்சுவார்தைக்கு பின்னர் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். பலியான மாணவி லட்சுமிஸ்ரீயின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுதந்திரதின விழா முடிந்ததும் மாணவி லட்சுமிஸ்ரீ தனது பள்ளி தோழியான மற்றொரு மாணவியுடன் தனித்தனியாக சைக்கிளில் சென்று உள்ளனர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக சாலையோரத்தில் செல்வது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.

மாணவி சென்ற அஸ்தினாபுரம், ராஜேந்திரபிரசாத் சாலை மிகவும் குறுகலானது ஆகும். பஸ் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியாகிவிட்டார்.

பல்வேறு ஆசை, எதிர்கால கனவுகளுடன் இருந்த மாணவியின் வாழ்க்கை நொடிப்பொழுதில் முடிந்து போனது அங்கிருந்தவர்களின் இதயத்தை நொறுக்கியது.

மாணவி லட்சுமிஸ்ரீ பலியானது பற்றி அறிந்ததும் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த விபத்து குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் மாணவி லட்சுமிஸ்ரீ பலியான சம்பவம் அவருடன் சுதந்திர தின விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற சக மாணவிகள் மற்றும் பள்ளி தோழிகளிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News