தமிழ்நாடு

அன்னூர் அருகே குட்டையில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி

Published On 2023-05-28 05:31 GMT   |   Update On 2023-05-28 05:31 GMT
  • பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது காக்காபாளையம் குட்டையில் சகோதரர்களின் சைக்கிள் மற்றும் உடைகள் கிடந்தன.
  • குட்டையில் குளிக்க சென்ற அண்ணன்- தம்பி ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அன்னூர்:

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த காக்காபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு தீபக்குமார் (வயது 10), வெற்றிவேல் (8) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

காக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபக்குமார் 5-வது வகுப்பும், வெற்றிவேல் 3-வது வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் அண்ணனும், தம்பியும் அங்குள்ள ஒரு குட்டையில் குளிப்பதற்காக, சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. எனவே பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது காக்காபாளையம் குட்டையில் சகோதரர்களின் சைக்கிள் மற்றும் உடைகள் கிடந்தன.

எனவே சந்தோஷ்குமார் உறவினர்களுடன் குட்டைக்குள் இறங்கி தேடி பார்த்தார். அப்போது தீபக்குமார், வெற்றிவேல் தண்ணீருக்குள் மூழ்கி மயங்கி கிடப்பது தெரியவந்தது. எனவே 2 பேரையும் உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாகடர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து தீபக்குமார், வெற்றிவேல் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. குட்டையில் குளிக்க சென்ற அண்ணன்- தம்பி ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News