தமிழ்நாடு

வாஜ்பாய் புகழைப் போற்றி வணங்குகிறோம்... அண்ணாமலை

Published On 2023-12-25 04:16 GMT   |   Update On 2023-12-25 04:16 GMT
  • பெண்கள் முன்னேற்றம், சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்காக அயராது உழைத்தவர்.
  • பாரதப் பிரதமராக, அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, நமது பாரதத்தை வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர்.

சென்னை :

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

முன்னாள் பாரதப் பிரதமரும், பாஜக நிறுவனர்களில் ஒருவரும், மிகச் சிறந்த பேச்சாளரும், கவிஞருமான, பாரத ரத்னா அமரர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம் இன்று.

சுதந்திரப் போராட்டத்தின்போது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்ற வாஜ்பாய், சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் மிகப்பெரிய பங்கு வகித்தவர். ஒன்பது முறை மக்களவைக்கும் இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், பாராளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என பல பதவிகளிலும் திறம்படப் பணியாற்றியவர்.

பாரதப் பிரதமராக, அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, நமது பாரதத்தை வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர். கார்கில் போரில் நம் தேசத்தின் எதிரிகளைத் தோற்கடித்தவர். நம் நாடு மிகவும் வலுவானது, வளமானது என்பதிலும் பெரும் நம்பிக்கை உடையவர்.

பெண்கள் முன்னேற்றம், சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்காக அயராது உழைத்தவர். தேசத்திற்கான அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. அவரது தலைமையும், தொலைநோக்கு பார்வையும் கோடிக்கணக்கான நம் நாட்டு மக்களை இன்றும் வழி நடத்துகிறது.

பாரதத்தின் மீது கொண்டுள்ள அன்பால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, நாட்டிற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளைக் கருத்தில் கொண்டு, நாட்டு மக்கள் அனைவரும் அரசால் சமமாக நடத்தப்படுவதையும், அனைவருக்கும் அரசின் சேவைகள் கிடைப்பதையும் உறுதிசெய்யும் வகையில், அமரர் வாஜ்பாய் பிறந்த தினம், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தேசிய நல்லாட்சி தினமாக அறிவிக்கப்பட்டது. வாஜ்பாய் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அவரது புகழைப் போற்றி வணங்குகிறோம்.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags:    

Similar News