ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் ஆக்கிரமித்து கட்டியிருந்த 333 வீடுகள் திடீர் இடிப்பு
- பொதுமக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்த பொருட்களுடன் வீதியில் நின்றனர்.
- உண்ண உணவும், இருக்க இடமும் எங்களுக்கு எப்படி கிடைக்கும் என்று அதிகாரிகளிடம் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த மேல் விஷாரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சாதிக் பாஷா நகர் உள்ளது. இங்கு 353 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வந்தனர்.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி உள்ளதால் அதனை அகற்ற கோரி கடந்த 30.3 2022 அன்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது 20 வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர்.
அப்பகுதியில் வசிப்பவர்கள் பண்டிகை வருவதால் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் கால அவகாசம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி டி.எஸ்.பி. பிரபு மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மேல்விஷாரம் பகுதியில் பொக்லைன் எந்திரத்துடன் அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டி உள்ள வீடுகளை அகற்ற வந்தனர்.
அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை பொருட்படுத்தாமல் 333 வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தனர்.
இதனால் பொதுமக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்த பொருட்களுடன் வீதியில் நின்றனர். அவர்களுக்கு கூறாம்பாடி பகுதியில் மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உண்ண உணவும், இருக்க இடமும் எங்களுக்கு எப்படி கிடைக்கும் என்று அதிகாரிகளிடம் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.