தமிழ்நாடு செய்திகள்

காட்பாடி அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.2½ லட்சம் பறித்த ரவுடி உள்பட 2 பேர் கைது

Published On 2023-05-13 10:33 IST   |   Update On 2023-05-13 10:33:00 IST
  • தனிப்படை போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
  • தாமோதரன் மீது காஞ்சிபுரம் சித்தூர் போலீஸ் நிலையங்களில் கொலை வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் திருவலம் அடுத்த இ.பி. கூட்ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணி முடிந்து கடையில் மது விற்பனை மூலம் வசூலான ரூ. 2 லட்சத்து 57ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தனது பைக்கில் காட்பாடி நோக்கி சென்றார்.

அவரை பின்தொடர்ந்து மர்ம கும்பல் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென அசோக்குமார் வாகனத்தை மறித்து அவரை தாக்கினர்.

அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் பைக், செல்போன் ஆகியவற்றை பறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

திருவலம் போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து 3 பேரை தேடி வந்தனர்.

தனிப்படை போலீசார் கொள்ளையர்களைப் பிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

திருவலம் பகுதியில் உள்ள கேமராவில் கொள்ளையர்கள் 3 பேர் உருவங்கள் பதிவாகி இருந்தது. இதன்மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும் அவர்கள் ஏற்கனவே வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சரவணன் என்கிற குட்லு ( வயது 32), காஞ்சிபுரம் சிறு காவேரிப்பாக்கம் தாமோதரன் (23) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக் மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான சரவணன் மீது சென்னை முக்தியால்பேட்டை, திருத்தணி, சித்தூர் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

தாமோதரன் மீது காஞ்சிபுரம் சித்தூர் போலீஸ் நிலையங்களில் கொலை வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இருவரும் ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News