தமிழ்நாடு செய்திகள்

காட்பாடியில் வந்தே பாரத் ரெயிலுக்கு பயணிகள் அதிக வரவேற்பு

Published On 2023-03-01 10:04 IST   |   Update On 2023-03-01 10:04:00 IST
  • கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
  • சென்னை சென்ட்ரல், பெங்களூரு மற்றும் மைசூருலிருந்து 8666 பேர் காட்பாடி வந்துள்ளனர்.

வேலூர்:

தமிழ்நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரெயில் நிலையத்துக்கு தினமும் சராசரியாக சுமார் 38,000 பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் ரூ.360 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரெயில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 10 வந்தே பாரத் ரெயில்கள் 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன.

அதில் சென்னை-மைசூர் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த வந்தே பாரத் ரெயில் புதன்கிழமை தவிர அனைத்து வார நாட்களிலும் சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20-க்கு மைசூரை சென்றடைகிறது. இடையில் காட்பாடி மற்றும் பெங்களூரு ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.

இதனால் காட்பாடி, வேலூர், அரக்கோணம், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய அனைத்துப் பகுதி மக்களும் பயனடைந்து வருகின்றனர்.

12.11.2022 முதல் 16.02.2023 வரை வந்தே பாரத் ரெயில் மூலம் காட்பாடியிலிருந்து சென்னை சென்ட்ரல், பெங்களூரு மற்றும் மைசூருக்கு 10,510 பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னை சென்ட்ரல், பெங்களூரு மற்றும் மைசூருலிருந்து 8666 பேர் காட்பாடி வந்துள்ளனர். 4 மாதத்தில் காட்பாடியில் இருந்து மட்டும் 19,176 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.

காட்பாடியில் வந்தே பாரத் ரெயிலுக்கு காட்பாடி சுற்றுப்புற மக்கள் பெரும் ஆதரவை அளித்து வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News