தமிழ்நாடு

மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல்முறையீடு செய்தவர்களுக்கு 10 நாளில் குறுஞ்செய்தி...

Published On 2023-11-23 07:13 GMT   |   Update On 2023-11-23 07:13 GMT
  • இரண்டு கட்டங்களையும் சேர்த்து 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் இதுவரை மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

சென்னை:

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைத்தார்.

அப்போது 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1000 அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்பிறகு விடுபட்டவர்களுக்கு கடந்த 10-ந்தேதி 2-வது கட்டமாக பணம் வழங்கப்பட்டது. இதில் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் பெண்களுக்கு 1000 ரூபாய் கிடைத்தது.

மொத்தமாக இரண்டு கட்டங்களையும் சேர்த்து 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் இதுவரை மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்துள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த அக்டோபர் 25-ந்தேதி வரை மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதில் 11 லட்சத்து 85 ஆயிரம் பெண்கள் மேல்முறையீடு செய்திருந்தனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி வேகமாக நடந்து வந்தது. இந்த பணி இப்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதில் விண்ணப்பங்கள் முழுமையாக பரிசிலீக்கப்பட்டு இப்போது தகுதியானவர்களுக்கு 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று அரசு உயர் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தகுதியான பயனாளிகள் விடுபடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News