தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக 4 பேரிடம் ரூ. 31 லட்சம் மோசடி- 2 பேர் மீது போலீசார் வழக்கு
- வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி கடைசியில் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
- ரகு, முத்துச்சாமி ஆகிய இருவர் மீதும் 420 உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி மணச்சநல்லூர் எஸ். அய்யம்பாளையம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). எம்.ஏ. பட்டதாரி. இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் மேலவீதி பகுதியைச் சேர்ந்த ரகு (44), தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேலரல் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி (39) ஆகிய இருவரின் அறிமுகம் கிடைத்தது.
அப்போது அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் தங்களுக்கு தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள். பணம் கொடுத்தால் வேலை வாங்கிவிடலாம் என கூறினர்.
இதனை ரமேஷ் நம்பினார். பின்னர் வேலை தேடி கொண்டிருந்த தனது நண்பர்களான பட்டதாரி இளைஞர்கள் சுப்பையன், செல்வராஜ், மனோகரன் ஆகியோருக்கும் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
உடனே அவர்களும் வேலைக்காக பணத்தைப் புரட்டினர். பின்னர் 4 பேரும் சேர்ந்து ரமேஷ் வீட்டில் வைத்து கடந்த 2018 நவம்பர் 3-ந் தேதி ரூ. 30 லட்சத்து 86 ஆயிரம் ரொக்க பணத்தை ரகு, முத்துச்சாமி ஆகியோரிடம் கொடுத்தனர்.
பின்னர் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி கடைசியில் போலி பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் கொடுத்த பணத்தை திரும்ப தருவதாக கால அவகாசம் கேட்டு அந்த நபர்கள் தப்பித்து வந்தனர். ஆனால் 5 ஆண்டுகள் ஆன பின்னரும் வேலையும் கிடைக்கவில்லை கொடுத்த பணமும் திரும்ப வரவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட ரமேஷ் உள்ளிட்ட 4 பேரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட சூப்பிரண்டு வருண்குமார் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி ரகு, முத்துச்சாமி ஆகிய இருவர் மீதும் 420 உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.