தமிழ்நாடு செய்திகள்

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர்

டிவி மெக்கானிக் கடையில் திடீர் தீ விபத்து: ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

Published On 2023-10-10 11:25 IST   |   Update On 2023-10-10 11:25:00 IST
  • நேற்று வழக்கம் போல் இரவு 7 மணியளவில் கண்ணன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
  • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்.

இவர் ஆத்தூர் புறவழிச்சாலை அருகே உள்ள பெரியாண்டிச்சி கோவில் பகுதியில் டிவி பழுது பார்க்கும் மெக்கானிக் கடை வைத்துள்ளார். நேற்று வழக்கம் போல் இரவு 7 மணியளவில் கண்ணன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் இரவு 11 மணியளவில் அவருடைய பூட்டிய கடையில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு பின் மற்ற இடத்திற்கு பரவாமல் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் கடையில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான டிவி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும் இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News