தமிழ்நாடு

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாகை மீனவர்கள் கரைக்கு திரும்பிய காட்சி.

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் கொடூர தாக்குதல்

Published On 2023-09-26 08:46 GMT   |   Update On 2023-09-26 09:48 GMT
  • கண்இமைக்கும் நேரத்தில் மீனவர்கள் ஹரிகிருஷ்ணன் உள்பட 5 மீனவர்களையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்க தொடங்கினர்.
  • தொடர் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகை அருகே உள்ள செருதூர் கிராமத்தில் இருந்து சக்திபாலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 26), சூர்யா (25), கண்ணன் (23), சிரஞ்சீவி, சக்தி பாலன் ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்டனர்.

இன்று அதிகாலை 5 பேரும் கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 2 அதிவேக படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் நாகை மீனவர்கள் பைபர் படகில் ஏறினர். கண்இமைக்கும் நேரத்தில் மீனவர்கள் ஹரிகிருஷ்ணன் உள்பட 5 மீனவர்களையும் ஆயுதங்களால் சரமாரியாக தாக்க தொடங்கினர்.

இந்த தாக்குதலில் மீனவர்கள் 5 பேரும் காயமடைந்து படகில் சரிந்து விழுந்தனர். இதனை தொடர்ந்து 550 கிலோ வலை, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பிடித்து வைக்கப்பட்ட மீன்கள், வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ் கருவி, பேட்டரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பினர்.

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மீனவர்கள் 5 பேரும் இன்று காலை கரைக்கு திரும்பி உறவினர்களுக்கு நடந்த விவரங்களை கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்த நாகை கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த மீனவர்களை நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோடியக்கரையில் மீன்பிடித்து கொண்டிருந்த 4 நாகை மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை பறித்து சென்றனர். தற்போது மீண்டும் கோடியக்கரையில் இலங்கை கடற்கொள்ளையர்கள், மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்கொள்ளையர்களின் தொடர் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News