தமிழ்நாடு செய்திகள்

விமானத்தில் எந்திரத்தில் மறைத்து கடத்திய ரூ.18.54 லட்சம் தங்கம் பறிமுதல்- வாலிபரிடம் விசாரணை

Published On 2022-12-01 12:43 IST   |   Update On 2022-12-01 12:43:00 IST
  • இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சியை வந்தடைந்தது.
  • தங்கம் வாங்கி வருவது தவறு கிடையாது, ஆனால் அதற்கான சுங்க வரியினை செலுத்தாமல் ஏமாற்றி செல்வதுதான் தவறு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சி:

திருச்சி சர்வதே விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அதிக அளவில் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே குருவிகள் மூலமாகவும், ஏஜெண்டுகள் மூலமாகவும் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தங்கத்தின் விலை குறைவாக இருப்பதால் அதை வாங்கி, மறைத்து எடுத்து வருவது அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் இன்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சியை வந்தடைந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளிடம் மத்திய நுண்ணறிவு பிரிவினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்திற்குரிய வாலிபரை தனி அறைக்கு அழைத்து சென்று அவரது உடமைகளை நவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதித்ததில் அவர் தங்கம் கடத்தி வந்தது உறுதியானது. அவர் தான் எடுத்து வந்த சிலிண்டர் போன்ற எந்திரத்தில் மறைத்து 347.500 கிராம் தங்கத்தை கடத்தி வந்துள்ளார்.

அதன் இந்திய ரூபாயின் மதிப்பு 18 லட்சத்து 54 ஆயிரத்து 955 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் பலர் வரி ஏய்ப்பு மூலம் ஆதாயம் அடையும் வகையில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவினர் தெரிவித்தனர். தங்கம் வாங்கி வருவது தவறு கிடையாது, ஆனால் அதற்கான சுங்க வரியினை செலுத்தாமல் ஏமாற்றி செல்வதுதான் தவறு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே தங்கம் கடத்தி வந்த வாலிபர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News