தமிழ்நாடு

வண்டலூர் அருகே வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை

Published On 2023-09-26 08:38 GMT   |   Update On 2023-09-26 08:38 GMT
  • மர்ம கும்பல் மோகன் ராஜை கடந்த 2 நாட்களுக்கு முன்பே வீடு புகுந்து கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது
  • கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

வண்டலூர்:

வண்டலூரை அடுத்த ஆதனூர், டி.டி.சி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). ரவுடி. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை மோகன்ராஜ் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மோகன்ராஜ் கொடூராமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரத்தம் முழுவதும் காய்ந்து இருந்தது.

எனவே மர்ம கும்பல் மோகன் ராஜை கடந்த 2 நாட்களுக்கு முன்பே வீடு புகுந்து கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மட்டும் தனியாக இருந்ததால் கொலை நடந்தது பற்றி அக்கம்பக்கத்தினருக்கு தெரியவில்லை. துர்நாற்றம் வீசிய பின்னரே வெளியில் தெரிந்நது.

கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

கொலையுண்ட மோகன் ராஜ் மீது கடந்த 2021-ம் ஆண்டு கொலை வழக்கு உள்ளது. அவரது தந்தை பம்மலில் வசித்து வருகிறார். தாய் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். பல்வேறு வழக்குகளில் எதிரிகள் மற்றும் போலீசார் தேடுவதை அறிந்ததும் மோகன்ராஜ் டி.டி.சி நகரில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்து உள்ளார்.

இதனை அறிந்த எதிர்தரப்பினர் வீடுபுகுந்து மோகன்ராஜை வெட்டி கொலை செய்து விட்டனர். பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News