தமிழ்நாடு செய்திகள்

விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட அரியவகை வெளிநாட்டு உயிரினங்கள் மீட்பு- மீண்டும் திருப்பி அனுப்ப நடவடிக்கை

Published On 2023-11-10 13:14 IST   |   Update On 2023-11-10 13:14:00 IST
  • உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
  • விசாரணைக்கு வராத நபர் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை:

சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று கடந்த 6-ந் தேதி கோவை விமான நிலையம் வந்தது. பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் இடத்தில் 3 பெட்டிகள் அனாதையாக இருந்தது. அந்த பெட்டிகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை.

ஒருநாள் முழுவதும் 3 பெட்டிகளும் அங்கேயே இருந்ததால் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் அடைந்து 3 பெட்டியை யார் எடுத்து வந்தார்கள் என்று கண்காணிப்பு கேமிரா மூலம் சோதனை செய்தனர்.

அப்போது 3 நபர்கள் பெட்டியை எடுத்து வந்து வைப்பதும், அவர்கள் சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அவர்களை விமான நிலையத்திற்கு வரவழைத்தனர். 3 பேரில் 2 பேர் டொமினிக், ராமசாமி ஆகியோர் விசாரணைக்கு வந்தனர். ஒரு நபர் வரவில்லை.

இதுகுறித்து விசாரணை மேற்கண்டபோது பெட்டியில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு உயிரினங்களான 11 ஆயிரம் ஆமைகள், சிலந்தி வகைகள், அரியவகை பாம்புகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அரியவகை வெளிநாட்டு விலங்குகள் என்பதால் மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்ப சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். விசாரணைக்கு வராத நபர் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News