தமிழ்நாடு செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழப்பார்- ஆர்.பி.உதயகுமார்

Published On 2023-02-01 09:19 IST   |   Update On 2023-02-01 09:19:00 IST
  • பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியவர்கள் தரவில்லை.
  • எனக்கு கட்சியா எனது இல்ல திருமண விழாவா என்று கேட்டால் முதலில் கட்சி தான் எனக்கு என் உயிரோடு கலந்தது என்பேன்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் வார்டு எண் 38-ல் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மதுரை திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மண்ணில் நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. எனும் ஆலமரத்தின் மகத்தான இடைக்கால பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நம் அனைவரும் அணிவகுத்து நிற்கின்றோம். ஈரோடு மண்ணின் மக்களின் மகிழ்ச்சியில் இன்று தெரிகிறது. நம் பெரிய வெற்றியை காண இருக்கிறோம்.

இன்று நாம் செல்லும் இடங்களில் எல்லாம் ஆண்களும், பெண்களும் இரட்டை இலை சின்னத்தை தேடி வர ஆரம்பித்து உள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தி.மு.க. சொன்ன அனைத்து வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றவே இல்லை.

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியவர்கள் தரவில்லை. அமைச்சர்கள் செல்லும் இடங்களில் பெண்களே நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினீர்களே ஆயிரம் ரூபாய் இதுவரை தரவே இல்லை என்று நேரடியாக வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட்டை இழப்பார். நாம் செல்லும் இடங்களில் எல்லாம் ஆண்களும், பெண்களும் முகம் மலர்ச்சியுடன் நம்மை வரவேற்று உபசரிப்பதை பார்த்தால் இதுவே நாம் கண்டுள்ள வெற்றியின் முதல் படி . எனது மூத்த மகள் திருமண விழா பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

ஆனால் அந்த வேலையை விட்டுவிட்டு கழகத்திற்காக நான் இன்று ஈரோட்டில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளேன். எனக்கு கட்சியா எனது இல்ல திருமண விழாவா என்று கேட்டால் முதலில் கட்சி தான் எனக்கு என் உயிரோடு கலந்தது என்பேன்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற்று வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று கொங்கு நாட்டு சிங்கம் அண்ணன் எடப்பாடி பழனிசாமி கரங்களை வலு சேர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News