பிரதமர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிப்பு
- ராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மோடி ராமேசுவரத்தில் இருந்து திரும்பும் வரை இந்த தடை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேசுவரம்:
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பிரதமர் மோடி முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதன்படி வருகிற 20-ந் தேதி ஸ்ரீரங்கத்திலும், மறுநாள் ராமேசுவரம் கோவிலிலும் பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.
இதையொட்டி ராமேசுவரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். ஹெலிகாப்டரிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடி ராமேசுவரத்தில் இருந்து திரும்பும் வரை இந்த தடை நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில்நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 12 பேரை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை கண்டித்தும், மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி நாளை (19-ந் தேதி) ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என பாம்பன் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.