தமிழ்நாடு

கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளை காணலாம்.

விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

Published On 2024-02-19 03:56 GMT   |   Update On 2024-02-19 03:56 GMT
  • ராமேஸ்வரம் மீனவர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நேற்று முதல் நடத்தி வருகின்றனர்.
  • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அறந்தாங்கி:

ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 23 பேர் மற்றும் அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறை பிடித்துச் சென்றனர்.

அதனை தொடர்ந்து 23 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய மாநில அரசுகளின் பரிந்துரையால் 21 மீனவர்களை விடுவித்த இலங்கை அரசு, படகை இயக்கிய ஓட்டுனருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அதில் 2-வது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நேற்று முதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்திருப்பதைக் கண்டித்தும், அதனை திரும்பப்பெற வேண்டும் எனவும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ராமநாதபுரத்தில் மீனவர்கள் நாளை தங்களது ரேசன் கார்டுகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News