தமிழ்நாடு

சிறுமி படுகொலை விவகாரம்: தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

Published On 2024-03-06 15:00 GMT   |   Update On 2024-03-06 15:00 GMT
  • புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
  • அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்திகள் புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

முன்னதாக அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் புதுச்சேரி இந்தியா கூட்டணி சார்பில் அமைதி பேரணி மற்றும் பந்த் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "பாண்டிச்சேரியில், 9 வயது சிறுமி இரண்டு நாட்களாகக் காணாமல் போன நிலையில், அந்தச் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு, சாக்கடையில் தூக்கி எறியப்பட்ட சம்பவம், நம் அனைவர் மனதையும் கலங்கச் செய்துள்ளது."

"மேலும் இந்தச் செயலைச் செய்தவர்கள் போதைக்கு அடிமையாகிய இளம் வயது மற்றும் வயது முதிர்ந்தவர்கள். கஞ்சா விற்பனை என்பது மிக மலிவாக அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. இதனால் மனிதர்கள் மிருகங்களாக மாறக்கூடிய ஒரு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது."

"எனவே யாருக்கும் எந்த விதப் பாதுகாப்பும் இல்லை. இந்த சம்பவம் மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தப் பாதகச் செயலை செய்தவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை நிச்சயம் வழங்க வேண்டும். சிறுமியை இழந்து வாடும் குடும்பத்திற்கு எங்களது வருத்தத்தையும், சிறுவயதிலேயே தன் உயிரை இழந்த சிறுமிக்கு, தே.மு.தி.க. சார்பாகக் கண்ணீர் மல்க அஞ்சலியையும் செலுத்துகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News