தமிழ்நாடு செய்திகள்

நாமக்கல்லில் இருந்து இலங்கைக்கு தினமும் 10 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி- கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி

Published On 2023-05-31 10:40 IST   |   Update On 2023-05-31 10:40:00 IST
  • கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர போராடி வருகிறது.
  • இலங்கைக்கு தினமும் 10 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆவதால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி.

நாமக்கல்:

இலங்கையில் கடந்த ஒரு ஆண்டாக பெரும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பண வீக்கத்தால் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர போராடி வருகிறது.

இதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள 2 கோழிப்பண்ணைகளில் இருந்து முதற்கட்டமாக 2 கோடி முட்டைகள் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு, அதில் 1 கோடி முட்டைகள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் உள்ள கால்நடை உற்பத்தி துறை மற்றும் எஸ்.டி.சி. அதிகாரிகள் தமிழகம் வந்தனர்.

நாமக்கல்லுக்கு வந்த அவர்கள் மொத்தம் 5 கோழிப்பண்ணைகளை நேரில் பார்வையிட்டு, முட்டையின் தரத்தை ஆய்வு செய்தனர். பின்னர் முட்டைகள் இறக்குமதி செய்ய பண்ணையாளர்களுக்கு அனுமதி அளித்தனர்.

இந்த 5 கோழிப்பண்ணைகளில் இருந்தும் தினசரி 10 லட்சம் முட்டைகள் இறக்குமதி செய்ய உள்ளதாக, இலங்கை ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேசன் (எஸ்.டி.சி.) சேர்மன் அசின் வலிசுந்தரா தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள், இலங்கையில் உள்ள பெரிய பேக்கரிகள், பிஸ்கட் உற்பத்தியாளர்கள், சமையல் காண்ட்ராக்டர்கள் மற்றும் ஓட்டல்களுக்கு, ஒரு முட்டை விலை ரூ.35 (இலங்கை எஸ்.எல்.ஆர்.) விலைக்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தினமும் 10 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆவதால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News