தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து 11,000 பஸ்கள் இயக்கம்

Published On 2024-01-11 14:51 IST   |   Update On 2024-01-11 14:51:00 IST
  • சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.
  • விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை கோட்டங்களை சேர்ந்த பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

சென்னை:

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. சென்னையில் பணி நிமித்தமாக தங்கி இருப்போர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் இந்த ஆண்டும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து பல இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் நாளை (12-ந்தேதி) முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படுகிறது.

அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக 4,706 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பஸ்களும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து 8,478 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம், பொங்கல் பண்டிகைக்காக 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து மொத்தம் 19,484 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படுகிறது.

திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை கோட்டங்களை சேர்ந்த பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. திருச்சி, தஞ்சை, கரூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது. டிசம்பர் 12-ந்தேதிக்கு முன்பு திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு செய்தவர்கள், கோயம்பேடுக்கு பதில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து உரிய நேரத்தில் பயணம் செய்யலாம்.

நாளை முதல் 14-ந்தேதி வரை அரசு பஸ்களில் பயணம் மேற்கொள்வதற்கு முன்பதிவு செய்ய வசதிவாக கோயம்பேடு, கிளாம்பாக்கம், தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையங்களில் மொத்தம் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், www.tnstc.in என்ற இணைதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். மேலும், பஸ்கள் இயக்கப்படுவது குறித்த தகவலை பெறவும், புகார் அளிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 9445014450, 9445014436 ஆகிய செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 18004256151 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும் பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வர வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தினமும் இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன், 4,830 சிறப்பு பஸ்களும், மற்ற நகரங்களுக்கு 6,459 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

Tags:    

Similar News