தமிழ்நாடு செய்திகள்

நாகர்கோவிலில் 2-வது முறையாக மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்

Published On 2023-04-23 14:59 IST   |   Update On 2023-04-23 14:59:00 IST
  • விக்னேஷ் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு, கஞ்சா வழக்கு, கருங்கல் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்பட 4 வழக்குகள் உள்ளது.
  • விக்னேஷ் பற்றி தெரிந்துகொண்ட மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி கதறினார்.

நாகர்கோவில்:

நாகர்கோவில், பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (வயது 24), கட்டிட தொழிலாளி.

பள்ளி மாணவிகளிடம் நட்பாக பேசி பழகி காதல் வலை வீசுவதும், தன்னை காதலிக்கும் மாணவிகளிடம் நெருக்கமாக இருந்துவிட்டு பின்னர் அவர்களை கழற்றி விடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு மாணவியை காதலிப்பது போல் நடித்து நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு பலாத்காரம் செய்ததை சொல்லியே மிரட்டி தன் நண்பர்கள் 2 பேருக்கு அந்த மாணவியை விருந்தாக்கி இருக்கிறார். அப்போது அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் விக்னேஷ் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு, கஞ்சா வழக்கு, கருங்கல் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்பட 4 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் விக்னேஷ் வழக்கம் போல ஆசாரிபள்ளத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகுதான் விக்னேஷ் பற்றி தெரிந்துகொண்ட மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி கதறினார். உடனே மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் விக்னேஷ் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். தற்போது அவர் மீது 2-வது முறையாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 2 முறை போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டும் போலீசாரிடம் சிக்காமல் விக்னேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். எனவே அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News