தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனை தகுதிநீக்கம் செய்ய கோரிய மனு- சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

Published On 2024-04-17 10:05 GMT   |   Update On 2024-04-17 10:05 GMT
  • கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது
  • இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்

கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரெயில் நிலையத்தில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என தகவல் பரவியது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேலாளர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த முருகன், ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான கீழ்ப்பாக்கம் ஓட்டலில் பணத்தை வைத்து விட்டு சென்றதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதையடுத்து, ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக நெல்லை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், "தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்டது தொடர்பாக பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், வாக்களர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நாளை விசாரிப்பதாக தெரிவித்தது.

Tags:    

Similar News