தமிழ்நாடு

புல்தரைகள் மீது உறைபனி படர்ந்திருப்பதை படத்தில் காணலாம்.

உறைபனியுடன் கடும் பனிமூட்டம் நிலவுவதால் மக்கள் அவதி: சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்குள்ளேயே முடங்கினர்

Published On 2024-01-02 05:33 GMT   |   Update On 2024-01-02 05:33 GMT
  • கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் சீதோசன நிலை மாறி மாறி வருகிறது.
  • வாகனங்கள் அனைத்தும் சாலையில் மிகவும் ஊர்ந்தபடியே செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

அருவங்காடு:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவும், மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுவதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் சீதோசன நிலை மாறி மாறி வருகிறது. இதில் இன்று அதிகாலை 5 மணியிலிருந்து காலை 8 மணி வரையிலும் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

கடும் குளிர் நிலவி வருவதால் உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் குடியிருப்புகள் மற்றும் விடுதிகளிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நீலகிரிக்கு வந்தவர்கள் நேற்று மாலை முதல் சமவெளி பகுதிகளுக்கு திரும்பி கொண்டு வருகின்றனர். இன்று காலையும் ஏராளமானோர் ஊர்களுக்கு சென்றனர்.

இதனால் மலைப்பாதையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்தன. கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே வாகனங்களை இயக்கி செல்கிறார்கள். வாகனங்கள் அனைத்தும் சாலையில் மிகவும் ஊர்ந்தபடியே செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உறைபனி அதிகமாக உள்ளது. இன்றும் உறைபனி அதிகமாக காணப்பட்டது.

ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உறைபனி கொட்டி புல்தரை முழுவதும் மறைந்து, வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காணப்பட்டது.

இதுதவிர கார், வேன், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களிலும் உறைபனி கொட்டி இருந்தது. அதனை பொது மக்கள் அகற்றி விட்டு தங்கள் பணிக்கு சென்றனர்.

இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலையாக 23.07 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். குளிரில் இருந்து காத்து கொள்ள குல்லா, சுவர்ட்டர் போன்ற ஆடைகளை அணிந்து வருகின்றனர்.

ஆங்காங்கே தீ மூட்டியும் மக்கள் குளிர் காய்ந்து வருகிறார்கள். ஊட்டியில் கொட்டி வரும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர்.

அவர்கள் சுவர்ட்டர் அணிந்து கொண்டும், தலையில் குல்லா அணிந்து சென்றதையும் காணமுடிந்தது.

தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News