தமிழ்நாடு

துரோகம் செய்தவர்களுக்கு மக்களும், தொண்டர்களும் தீர்ப்பு தருவார்கள்- டி.டி.வி.தினகரன்

Published On 2023-03-24 05:09 GMT   |   Update On 2023-03-24 05:10 GMT
  • ஒரு சிலரின் ஆணவத்தால், அகங்காரத்தால், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனப்பட்டு வருகிறது.
  • துரோகிகளை பற்றி டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

திருவாரூர்:

திருவாரூர் நகர அ.தி.மு.க. செயலாளர் ஆர்.டி.மூர்த்தியின் மகள் பூஜாவுக்கும் சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரின் மகள் கார்த்திக்குக்கும் திருவாரூர் தனியார் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில் சசிகலா, டி.டி.வி.தினகரன், திவாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு சிலரின் ஆணவத்தால், அகங்காரத்தால், பணத்திமிரால் அம்மாவின் இயக்கம் மிகவும் பலவீனப்பட்டு வருகிறது. ஒரு சில சுயநலவாதிகளால் தமிழகம் பாழடைந்து விட்டது. அவர்கள் செய்த தவறுகளால் தான், தீய சக்தியான தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் தான் இன்றைக்கு தவறான நடவடிக்கைகளில் சட்டசபையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அம்மாவினுடைய கட்சி, அம்மாவின் தொண்டர்கள் பலர் தவறான பதவி வெறியால், நடைபெறும் பதவி சண்டைகளை பார்த்து வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அம்மாவினுடைய இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என்பதை உணரும் காலம் விரைவில் வரும். துரோகிகளை பற்றி டெல்லியில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். துரோகிகள் தான் என்பதை அவர்களும் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பிட்ட சில நபர்களை வைத்து வைத்துக்கொண்டு கட்சியை விட்டு யாரையும் நீக்கிவிடக்கூடாது என்பதற்காக தான் தொண்டர்கள் சேர்ந்து கட்சியின் தலைமை பதவியான பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தலைவர் காலத்தில் விதி இருந்தது. அந்த விதியை பழனிசாமி மாற்றி யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதை மாற்றி 20 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு வேண்டும் என்று தலைவரின் விதியையே மாற்றி அமைத்துவிட்டார்கள்.

துரோகம் செய்தவர்களுக்கு வெகு விரைவில் மக்களும் தொண்டர்களும் தீர்ப்பு தருவார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இரட்டை இலை இருந்தும் தி.மு.க.விற்கு 20 மாதங்களில் 5 ஆண்டுகளில் வரவேண்டிய கெட்ட பெயர் இருந்தும், ஏதோ 20,000 ஓட்டில் அவர்கள் ஜெயிப்பார்கள் என்று நினைத்தோம்.

ஆனால் 67,000 வாக்கு வித்யாசத்தில் ஜெயிப்பது என்பது எதிர்க்கட்சியாக போட்டியிட்ட அ.தி.மு.க. எங்கள் கோட்டை என்கிற இடத்தை கோட்டை விட்டுவிட்டது. செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று சொன்னார் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News