தமிழ்நாடு செய்திகள்

அடகு கடையின் பின்புற சுவற்றில் மர்ம நபர்கள் துளையிட்ட இடத்தில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்த காட்சி.

சுவரில் துளைபோட்டு கைவரிசை- அடகு கடையில் 209 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2022-10-31 08:53 IST   |   Update On 2022-10-31 17:23:00 IST
  • கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
  • நாய் அடகு கடையின் பின்புறமாக சென்று முன்பக்கமாக வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி கடைவீதியில் ராஜஸ்தானை சேர்ந்த சங்கர் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

கடந்த 28-ந் தேதி இரவு 7 மணியளவில் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சங்கர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் சங்கர் மற்றும் அவரது கடையில் வேலை பார்த்து வரும் தில்கேஷ், அஜித் ஆகியோர் கடையை திறக்க வந்தனர்.

அப்போது கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடையின் பின்பக்க சுவற்றை மர்ம நபர்கள் துளையிட்டு லாக்கரில் வைத்திருந்த 209 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அடகு கடையின் பின்புறமாக சென்று முன்பக்கமாக வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News