தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தல்: தமிழகம் - புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் இன்று வெளியீடு

Published On 2024-03-30 01:55 GMT   |   Update On 2024-03-30 01:55 GMT
  • தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது.
  • புதுச்சேரியில் 27 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சென்னை:

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19-ந்தேதியே தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. என்றாலும், பங்குனி உத்திர நாளான 25-ந்தேதிதான் பெரும்பாலானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். 27-ந்தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. தமிழகத்தில் மொத்தம் 1,749 பேர் வேட்புமனு அளித்து இருந்தனர்.

அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் தாக்கல் செய்திருந்தனர். புதுச்சேரியில் 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, வேட்பாளர்கள் கொடுத்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. இதனால், பல இடங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இறுதியில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல், புதுச்சேரியில் 27 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும். மாலை 5 மணி வரை தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம்.

அதன்பின்னர், வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அப்போதுதான், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள்? என்ற இறுதி விவரம் தெரியவரும். தொடர்ந்து சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும்.

அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சிக்கான சின்னம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் 152 சுயேச்சை சின்னங்களில் இருந்து சின்னம் ஒதுக்கப்படும்.

Tags:    

Similar News