தமிழ்நாடு

ஓணம் திருநாள்... தமிழக ஆளுநர், முதல்வர் வாழ்த்து

Published On 2022-09-07 14:28 GMT   |   Update On 2022-09-07 15:12 GMT
  • மாமன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
  • சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னை:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

தமிழ்நாடு மற்றும் கேரள மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஓணம் நன்னாள் வாழ்த்துகள். அழகிய இத்திருநாள் மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமைக்கான அறுவடைத் திருநாளாகும். மக்கள் அனைவரையும் வாழ்த்துவதற்கு வருகைதரும் மாமன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் ஒளிவிடும் பல்வேறு வண்ணங்கள் நம் அனைவருக்குமான அன்பையும், சகோதரத்துவதையும், வலிமையுறச் செய்யட்டும். மாமன்னன் மகாபலியின் வாழ்த்துக்கள் இந்த அம்ருதகாலத்தில் நம் இந்தியத் திருநாட்டின் இலக்கை நிறைவுசெய்வதாக அமையட்டும்.

இவ்வாறு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:-

மலையாள மண்ணின் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடும் பண்பாட்டுப் பெருவிழாவான திருவோணம் நாளை (செப்டம்பர்-8) கொண்டாடப்பட இருக்கிறது. நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும், வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டும் நாள் ஓணம் திருநாள்.

அத்தப்பூ கோலமிட்டு, பட்டாடையும் புத்தாடையும் உடுத்தி, அறுசுவை உணவருந்திச் சேர நாட்டவர் கொண்டாடும் அறுவடைத் திருவிழா ஓணம். 'மாயோன் மேய ஓண நன்னாள்' எனச் சங்க இலக்கியமாம் மதுரைக் காஞ்சியிலும் குறிப்பிடப்படும் இத்திருநாள் திராவிட நிலத்தின் தொன்மையையும் நம்மிடையேயான பண்பாட்டு உறவையும் காட்டும் விழா. கேரள மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து அனைவரும் ஒண்றிணைந்து கொண்டாடி ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவாக ஓணம் இருக்கிறது.

அத்தகைய திருநாளைத் தமிழ்நாட்டில் உள்ள மலையாளி உடன்பிறப்புகளும் ஏற்றத்துடன் கொண்டாடுவதற்கேற்ப, இங்குள்ள எல்லையோர மாவட்டங்களிலும் சென்னையிலும் அரசு விடுமுறை அளித்தது கழக அரசு என்பதை இத்தருணத்தில் நினைவுகூர்ந்து, உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்குத் தமிழ்நாட்டின் சார்பாக எனது ஓணத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும் ஒற்றுமையும் சமத்துவமும் சகோதர உணர்வுமே நம் வலிமை என்பதைப் பறைசாற்றுவதாக இத்தகைய பண்பாட்டுத் திருவிழாக்கள் அமையட்டும்!

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News