தமிழ்நாடு

துணை ஜனாதிபதி தேர்தல்- மனுதாக்கல் தொடங்கியது

Published On 2022-07-05 10:37 GMT   |   Update On 2022-07-05 10:37 GMT
  • மனுதாக்கல் செய்ய வருபவர்களின் வசதிக்காக பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

புதுடெல்லி:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நடக்கிறது.

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

இதையடுத்து மனுதாக்கல் செய்ய வருபவர்களின் வசதிக்காக பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 20-ந்தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெற 22-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

வேட்புமனு தாக்கல் செய்யும்போது குறைந்தபட்சம் 20 எம்.பி.க்கள் முன்மொழிய வேண்டும். 20 எம்.பி.க்கள் ஆதரிக்க வேண்டும். ஒரு எம்.பி. ஒரு வேட்புமனுவை மட்டுமே முன் மொழியவோ அல்லது ஆதரிக்கவோ வேண்டும்.

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். டெபாசிட் தொகையாக ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும்.

துணை ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள். மட்டுமே வாக்களிப்பார்கள். பாராளுமன்றம் மற்றும் மேல்சபையை சேர்ந்த 788 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பதால் ஓட்டுப்பதிவு பாராளுமன்றத்தில் மட்டுமே நடக்கிறது.

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆளும் பா.ஜனதா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இன்னும் அறிவிக்கவில்லை.

Tags:    

Similar News