தமிழ்நாடு

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்- போலீசார் தீவிர விசாரணை

Published On 2024-03-29 07:27 GMT   |   Update On 2024-03-29 07:27 GMT
  • நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தாக்கியதாக கூறி, ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவனையில் சேர்ந்துள்ளார்.
  • நாளைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் கொன்று விடுவோம் எனக்கூறி மிரட்டினர்.

கிருஷ்ணகிரி:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த எச்சனஹள்ளியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 51). இவர், திராவிட தெலுங்கு தேசம் கட்சி மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வருகிற பாராளுமன்ற தேர்தலில், திராவிட தெலுங்கு தேசம் கட்சி பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சியுடன் இணைந்து தமிழகத்தில் 13 இடங்களில் போட்டியிடுகிறது.

இந்த கட்சிக்கு நாம் தமிழர் கட்சி முன்பு பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னை, நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தாக்கியதாக கூறி, ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவனையில் சேர்ந்துள்ளார்.

இது குறித்து பாரதிய மக்கள் ஐக்கியதா கட்சி வேட்பாளர் ஆறுமுகம் கூறியதாவது:-

நான் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோதிலிருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்னை கண்காணித்த வண்ணம் இருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனைக்கு வந்த போது அவர்கள் என்னை பின் தொடர்ந்தனர். இதையறிந்த நான் என் நண்பரின் காரில் ஓசூர் நோக்கி சென்றேன்.

கிருஷ்ணகிரியில் இருந்து, 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்மனூர் அருகே சென்றபோது, 10-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிளில் வந்த நாம் தமிழர் கட்சியினர், எங்கள் காரை வழிமறித்து என்னையும் என்னுடன் இருந்தவர்களையும் கடுமையாக தாக்கினர். மேலும் விவசாயி சின்னத்தில் நீ போட்டியிட கூடாது. நாளைக்குள் வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் கொன்று விடுவோம் எனக்கூறி மிரட்டினர். இவ்வாறு அவர் கூறினார்.

காயமடைந்த ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News