தமிழ்நாடு செய்திகள்

I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறாவிட்டால் இந்தியாவை காப்பாற்ற முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2023-08-17 18:17 IST   |   Update On 2023-08-17 18:17:00 IST
  • மக்கன் நலனில் அக்கறை இல்லாத பிரதமரும், அமித்ஷானும் திமுக மீது விமர்சிக்கின்றனர்.
  • தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டியாக பல ஆயிரம் கோடி வசூலிக்கும் மத்திய அரசுக்கு எய்ம்ஸ் கட்டித்தர மனமில்லை.

தென்மண்டல அளவிலான திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மேலும் அவர் பேசியதாவது:-

மக்களினம் தேவைகளை பார்த்து பார்த்து பூர்த்தி செய்து வருகிறோம். மக்களுக்கு நம் மீது நம்பிக்கை உள்ளது. ஒரு கோடிக்கும் மேலான பெண்கள் செப்டம்பர் மாதம் முதல் மாதம் தலா ரூ.1000 வாங்க உள்ளனர்.

13 லட்சம் குடும்பங்களின் நகை கடனை தள்ளுபடி செய்துள்ளோம். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்.

எதிரிகளின் அவதூறுகளை முறியடிக்க சமூக ஊடகங்களில் கணக்கு துவங்குங்கள். டீக்கடை, சலூனில் பேசப்பட்ட அரசியல் தற்போது சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது.

இந்தியாவின் கட்டமைப்பை பாஜக ஆட்சி சின்னாபின்னம் ஆக்கிவிட்டது. இந்தியா கூட்டணி வெற்றி பெறாவிட்டால் இந்தியாவை காப்பாற்ற முடியாது.

பிரதமராக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டினாரா பிரதமர் மோடி? உலகளவில் ராமநாதபுரத்தை புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மாற்றுவேன் என கூறினார். மாற்றினாரா ?

தனுஷ் கோடி ரெயில் பாதை உள்பட பல்வேறு வடைகளை சுட்டுள்ளார் பிரதமர் மோடி. கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை.

தமிழக மீனவர்களின் கைது தொடர் கதையாக உள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படாமல் தடுப்போம் என்று பிரதமர் வாக்குறுதி தந்தார், நிறைவேற்றினாரா?

மீனவர்களை விரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளை பறிப்பது என அராஜகம் தொடர்கிறது.

இவற்றையெல்லாம் தட்டிக்கேட்காமல் பாஜக அரசு வேடிக்கை பார்க்கிறது. 2015ம் ஆண்டில் அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் வந்தபாடில்லை.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டியாக பல ஆயிரம் கோடி வசூலிக்கும் மத்திய அரசுக்கு எய்ம்ஸ் கட்டித்தர மனமில்லை.

இந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்றும் வகையிலேயே அமைச்சர் எ.வ.வேலு பேசினார். இதில் எங்கே பிரிவினை இருக்கிறது, இதை தான் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சரும் திரித்து பேசுகின்றனர்.

சொந்த கட்சியில் ஆள் இல்லாததால் மாற்று கட்சியில் இருந்து கடன் வாங்கி திமுகவை பிரதமர் மோடி விமர்சிக்கிறார்.

ஜெயலலிதா பற்றி பேசிய மத்திய நிதியமைச்சர், மணிப்பூர் பற்றி பேச மறந்தது ஏன்? மக்கன் நலனில் அக்கறை இல்லாத பிரதமரும், அமித்ஷாவும் திமுகவை விமர்சிக்கின்றனர்.

திமுக சரியான பாதையில் செல்வதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாஜகவின் அடிமையாக அதிமுக உள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைக்காக திமுக மட்டுமே குரல் கொடுக்கும்.

திமுகவின் கொள்கையை மற்ற மாநில கட்சிகளும் பின்பற்ற தொடங்கி உள்ளது பாஜகவை உறுத்துகிறது. இந்தியாவில் இருக்கும் ஆன்டி இந்தியன்களாக பாஜகவினர் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News