பழனி கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி அமைச்சர்கள் பங்கேற்பு
- வேலவன் விடுதி வளாகத்தில் கோவில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர்.
- ரோப் கார் கீழ்நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்கல மகிழுந்துகளையும் (பேட்டரிகார்) அமைச்சர்கள் வழங்கினார்கள்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்திட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 27.01.2023 குடமுழுக்கு அன்று நடைபெறவுள்ளது.
அதனையொட்டி இன்று நடைபெற்ற பந்தக்கால் நடும் விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, வேலவன் விடுதி வளாகத்தில் கோவில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் மலைக்கோவில் ராஜ கோபுர கலசங்களுக்கு தங்க ரேக் ஒட்டும் பணிகள், ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் மலைக் கோவில் நீராழி பத்தி மண்டபத்தினைச் சுற்றிலும் தற்போதுள்ள இரும்பு மற்றும் எவர்சில்வர் கம்பிகளால் ஆன தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகளுக்கு பதிலாக கோவில் அமைப்பிற்கேற்றவாறு, பித்தளையிலான தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள் அமைத்தல், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நீராழிபத்தி மண்டபத்திற்கும், மகா மண்டபத்திற்கும் இடையில் இரும்பிலான தடுப்பு வேலிகளை அகற்றி பித்தளை கம்பி வேலி அமைத்தல், ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தங்க விமானத்தை சுற்றியுள்ள இரும்பினால் ஆன பாதுகாப்பு வேலியினை அகற்றி பித்தளையிலான பாதுகாப்பு வேலியினை அமைத்தல் ஆகிய திருப்பணிகளை தொடங்கி வைத்தனர்.
ரோப் கார் கீழ்நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்கல மகிழுந்துகளையும் (பேட்டரிகார்) அமைச்சர்கள் வழங்கினார்கள்.