தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

Published On 2024-09-03 09:09 IST   |   Update On 2024-09-03 11:49:00 IST
  • ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.
  • சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை:

மேகதிசை காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் நள்ளிரவில் லேசான மழை பெய்கிறது.

திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இன்று காலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைகிறது.

கடந்த வாரம் மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்து ஆந்திரா அருகே கரையை கடந்தது. இதனால் ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

அங்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை வலுவடைகிறது.

இதன் காரணமாக தமிழகத்திற்கு அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றாலும் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோர பகுதிகள் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மணிக்கு 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News