காதல் திருமணம் செய்த தம்பதியை கோவில் திருவிழா, நிகழ்ச்சிகளில் ஒதுக்கிவைப்பு- கண்ணீர் புகார்
- பாலகிருஷ்ணன்-மோகனாபிரியா தம்பதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.
- கிராமத்துடன் சேர்த்துவைக்கும்படி கண்ணீர் மல்க பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் மனு அளித்தனர்.
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமம் புதுத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(31). இவரது மனைவி மோகனாபிரியா. இருவரும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டதால் சுண்ணாம்பு குளம் கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் பாலகிருஷ்ணன்-மோகனாபிரியா தம்பதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.
மேலும் கிராமத்தில் நடைபெறும் கோவில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் காதல் தம்பதியினை பங்கேற்க விடுவதில்லை.
மேலும் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்குத் தொகையை அவர்கள் வழங்கினால் கூட அதனை ஏற்க மறுத்து கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைத்து இருப்பதாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த காதல் தம்பதி தங்களுக்கு நேரும் கொடுமை குறித்தும் அதனை சரிசெய்து கிராமத்துடன் சேர்த்துவைக்கும்படி கண்ணீர் மல்க பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் மனு அளித்தனர். இது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.